Tharman Shanmugaratnam: சிங்கப்பூரின் அதிபராகப் பொறுப்பேற்ற தமிழ் வம்சாவளி – யார் இந்த சண்முகரத்னம்?

உலகளவில் தமிழர்கள் பல்வேறு துறைகளில் ஆளுமை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் அரசியல் ஆளுமையாக ஒரு தமிழர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்கு நெருங்கிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் (செப்டம்பர் 13) நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) போட்டியிட்டார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சுமார் 27 லட்சம் மக்கள் வாக்களிக்கும் இந்தத் தேர்தல் மும்முனைப் போட்டியாக நடந்தது. இந்தத் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவிகித வாக்குகள் பெற்று இன்று சிங்கப்பூரின் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார். பெரும்பான்மை மக்களின் வாக்குகளால், சிங்கப்பூரில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர் ஒருவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டது, பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் வெற்றி குறித்து பிரதமர் லீ சியென் லூங், “இந்த உயர் பதவிக்குத் தகுதியான ஒருவரை சிங்கப்பூர்வாசிகள் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்டவர் தர்மன் சண்முகரத்னம் (66). 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்தத் தொகுதியிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

அதன்படி 22 ஆண்டுக்கால அரசியல் பயணத்தில் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். 2019-ல் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன் சண்முகரத்னம், பொருளியல் கொள்கைகள் வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகித்தார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோதே, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, மக்கள் செயல் கட்சியிலிருந்தும் விலகினார். அதோடு, தான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளையும் துறந்தார். அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூரிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான சூழலை எதிர்நோக்குவோம். அது நம்மைப் பிரிக்காது. நியாயமான, அதிக இரக்கமுள்ள மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நான் நம்புகிறேன்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

என் வாழ்க்கை அதற்கே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் நாம் எதிர்கொள்ளும் கடினமான மற்றும் சவாலான எதிர்காலம் இதுவாக இருக்கும். அதற்காக தேசிய, சர்வதேச அளவில் எனது அனைத்து அனுபவங்களையும், திறன்களையும் வழங்குவதற்காக இந்தப் போட்டியில் நுழைந்திருக்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரின் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவரின் செயல்பாடுகளை இனி காலம் பதிவு செய்யும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.