![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/NTLRG_20230914145803604558.jpg)
4 நடிகர்களுக்குத் தடை : தயாரிப்பாளர் சங்கம் முடிவு
தமிழ் சினிமாவில் முக்கியமான சங்கங்களில் ஒன்றாக இருப்பது தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகியோருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
“அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் தொடர்பாக அதன் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிம்புவுக்கும் அப்போதிருந்தே பிரச்சனை இருந்து வருகிறது. பல முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் சிம்பு வரவில்லை. அதனால், அவருக்குத் தடை என முடிவு செய்துள்ளார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் இயக்கம் நடிப்பில் படம் ஒன்று ஆரம்பமானது. ஆனால், அப்படத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மேற்கொண்டு அந்தப் படத்திற்காக தனுஷ் வரவில்லையாம். அதுதான் அவருக்குத் தடையாக வந்துள்ளது.
தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது சங்கத்தின் பணத்தை முறையாக கையாளவில்லையாம். அதை வைத்து அவருக்குத் தடை கொடுத்துள்ளார்களாம்.
நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாருக்கு அதர்வா தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லையாம். அதன் காரணமாக அதர்வாவுக்குத் தடை விதித்திருக்கிறார்களாம்.
இதற்கு முன்பு இது போல் நடிகர்களுக்குத் தடை எனச் சொல்வார்கள். ஆனால், வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள். அதே சமயம் மறைமுகமாக அந்தத் தடையை செயல்படுத்துவார்கள். தற்போது சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.