ஆசிய கோப்பை இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியை வெறும் 50 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது. 51 ரன்கள் எடுத்தால் சாம்பியன் ஆகலாம் என்ற சூழலில் சேஸிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. அப்போது தொடக்க ஆட்டக்காரராக இருந்த கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறங்கினார். கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
முகமது சிராஜ் அபாரம்
இப்போட்டியில் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க முழுமுதற் காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான். அவர் 7 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கொத்தாக அள்ளினார். இதன் பிறகு இந்திய அணி வெற்றிகரமாக சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. சர்பிரைஸாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓப்பனிங் இறங்கவில்லை. இறுதிப் போட்டிக்கு முந்தைய வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். அதனால் இப்போட்டியில் அவர் களமிறங்கக்கூடும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் களமிறங்கவில்லை.
ரோகித் சர்மாவுக்கு பொன்னான வாய்ப்பு
இந்த போட்டியில் ரோகித் சர்மா ஓப்பனிங் இறங்கியிருந்தால் அது அவருக்கு பொன்னான வாய்ப்பாக இருந்திருக்கும். ஏனென்றால் சேஸிங் செய்ய வேண்டிய ரன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவானது. இதில் அவர் ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், ரோகித் சர்மாவின் சராசரி உயர்ந்திருக்கும். ஆனால், இஷான் கிஷான் கில்லுடன் ஓப்பன் செய்தார். ஒருவேளை ரோஹித் காயம் அடைந்தாரா? முன்னெச்சரிக்கையாக அவர் களமிறக்கப்படவில்லையா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
ரோகித் சர்மா சொன்ன காரணம்
ஆனால், உண்மையில் அதுவல்ல காரணம். இலக்கு மிக மிக குறைவாக இருந்ததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளார். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எடுத்த இந்த முடிவுக்கு ஏற்ப இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் விக்கெட் இழப்பில்லாமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் மகிழ்ச்சியடைந்த ரோகித் சர்மா, இதைதான் வீரர்களிடம் இருந்து தான் எதிர்பார்ப்பதாகவும், அவர்களும் அதற்கேற்ப விளையாடுவதாகவும் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி இப்போது நல்ல நிலமையில் இருப்பதாகவும், உலக கோப்பைக்கும் இதே உத்வேகத்தில் செல்ல இருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருக்கிறார்.