கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு பொருளாதார நெருக்கடிக்குள்ளான பாகிஸ்தான், கடந்த ஆண்டு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்க ஆட்சி மாற்றத்தைக் கண்டபோதும், இன்றுவரை சீரான பொருளாதார நிலையை எட்டவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/97119_thumb.jpg)
நேற்று மாலை லாகூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், லண்டனில் இருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசிய நவாஸ் ஷெரீப், “இந்தியா நிலவை அடைந்துவிட்டது, ஜி20 கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதே வேளையில், பாகிஸ்தான் பிரதமர் நிதிக்காக நாடு, நாடகச் சென்று கையேந்திக் கொண்டிருக்கிறார்.
இந்தியா செய்த சாதனைகளைப் பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை… இதற்கெல்லாம் இங்கு யார் பொறுப்பு… அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரானபோது, இந்தியாவிடம் பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால், நிதிக்காக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/nawaz_sharif_conviction.png)
2019-ல், அல்அஜிசியா மில் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான பிறகு, மருத்துவக் காரணங்களுக்காக லண்டனுக்குச் சென்ற நவாஸ் ஷெரீப், தேர்தல் வேலைகளில் கட்சியை தலைமை தங்குவதற்காக வரும் அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிப் அல்வி கடந்த வாரம் புதன்கிழமை, நவம்பர் 6-ம் தேதியை பொதுத் தேர்தலுக்கான தேதியாக முன்மொழிந்து, தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.