'ரிஷப் பண்ட் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்'-ஆடம் கில்கிறிஸ்ட்

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பண்ட் செய்து காட்டியுள்ளார் என்று அவரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

இது குறித்துஅவர் கூறுகையில்;-

ரிஷப் பண்ட் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏனெனில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் பேட்டிங் செய்து வரும் விதம் நன்றாக இருக்கிறது. பொதுவாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போன்று இல்லாமல் அதிரடியான இன்னிங்ஸை அவர் விளையாடி வருகிறார்.

எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் சரி, அணி சிக்கலில் இருக்கும் போது அவருடைய தைரியமான அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு காரணமாகவும் இருந்து வருகிறது. அவரின் இந்த செயல்பாடு உலகில் உள்ள மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என பாராட்டியுள்ளார்.

முன்னதாக கில்கிறிஸ்ட் அளித்திருந்த பேட்டி ஒன்றில் : ரிஷப் பண்ட் உலகின் எந்த மூலையில் பேட்டிங் செய்யவதாக இருந்தாலும் அந்த மைதானத்தில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி அவரது பேட்டிங்கை காண விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.