ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து

நியூயார்க்,

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி ஐ.நா.வின் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என கூறினார்.

அவர் தொடக்க உரையாக பேசும்போது, உலகம் நமக்கு முன் வைத்துள்ள சவால்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், நேர்மறையான வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது.

நீடித்த வளர்ச்சி இலக்குகளை நாம் மீண்டும் அடைவதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது. இதற்கு பொருள் என்னவெனில், நம்முடைய பாரம்பரிய நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், உலகில் எழுச்சி பெற்று வரும் சக்தி படைத்த நாடுகளுக்கும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து ஊக்குவித்து வருகிறது. இதன்படி, இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அரங்கில் ஓர் உயர்ந்த குரலாக இடம்பெற உண்மையில் ஆப்பிரிக்காவும் தகுதி வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.