தலைக்கேறிய போதை, தகராறு… நண்பனைக் கொலைசெய்த இளைஞர்! – கைதுசெய்த போலீஸ்

சென்னை புழல், அறிஞர் அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). பெயின்ட்டிங் வேலை செய்து வந்தார். இவரின் நண்பர் மணி என்கிற சஞ்சய். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி இரவு மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மணி, அருகில் கிடந்த இரும்பு பைப்பால் சரவணனை சரமாரியாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையிலிருந்த மணி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சரவணன் உயிரிழந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் அம்மா, புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சரவணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், மணியைக் கைதுசெய்தனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இரும்பு பைப்பையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மணி

இது குறித்து புழல் போலீஸார், “கொலைசெய்யப்பட்ட சரவணன் மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். சம்பவத்தன்று சரவணனும் மணியும் போதையில் பேசிக் கொண்டிருந்தபோதுதான், இந்தக் கொலை நடந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட மணி மீது வழிப்பறி உட்பட இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்குப் பிறகு மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.