விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் செருப்பு அணிந்தேனா? – இயக்குனர் பரா கான் விளக்கம்
இரண்டு தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிலும் மும்பையில் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி விநாயகர் சதுர்த்திக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் இருந்தும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்னொரு பக்கம் இன்னும் சில பிரபலங்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்படி பிரபல பாலிவுட் நடன இயக்குனரும் மற்றும் திரைப்பட இயக்குனருமான பரா கான் இதுபோன்று ஒரு விநாயகர் சதுர்த்தி விழாவில் தனது தோழிகளான நடிகை ஹுமா குரேஷி மற்றும் பத்ரலேகா ஆகியோருடன் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் பரா கான். ஆனால் அந்த புகைப்படத்தில் அவர் காலில் செருப்பு அணிந்தபடி காட்சியளித்தது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் அதுகுறித்து தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்த துவங்கினர்..
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பரா கான் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த புகைப்படம் நாங்கள் விழா மண்டபத்தின் வெளியே வந்து கிளம்பும்போது ஒன்றாக எடுத்துக் கொண்டது” என்று கூறியுள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்ற உள் அரங்கில் தான் செருப்பு அணியாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.