மதுரை: நியோ – மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியோ-மேக்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நியோ- மேக்ஸ் விவகாரத்தில் முதலீட்டாளர்களுக்கு பணம் மற்றும் நிலம் வழங்குவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி நிறுவன இயக்குனர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் உட்பட உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டுள்ளது. அதற்கு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. நிலங்கள் விற்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடி பரப்பளவு நிலங்களுக்கு (2,249.565 ஏக்கர்) அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடி பரப்பரளவு நிலங்கள் பத்திரப்பதிவுக்கு தயாராக உள்ளது. பல மாவட்டங்களில் நிலங்கள் உள்ளன. எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறோம். இதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. வழக்கு விசாரணை முழுமையடைய 6 மாதங்கள் ஆகும். இதுவரை 557 பேர் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள், நிர்வாகிகள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். 9428 சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது தேவையற்றது என்றார்.
மனுதாரர் தரப்பில், நிறுவனம் தொடர்பான முழுத்தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவிடம் உள்ளது. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிலங்கள், வீட்டுமனை விவரங்களும் போலீஸாரிடம் உள்ளன. பணப்பரிவர்த்தனை, வங்கிகணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது என்றார். இதையடுத்து நியோ-மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் முழு பட்டியலையும் நியோ-மேக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப். 27-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.