பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி கோல்டி பிராருடன் தொடர்புடையவர்களை பிடிக்க, பஞ்சாப் முழுதும் அம்மாநில போலீசார் நேற்று சோதனை நடத்தினர். மாநிலம் முழுதும், 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையில், 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்த கோல்டி பிரார், 2017ல், கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்று, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் போலீசார் ரெய்டு
கனடாவில் வசிக்கும் இந்தியர்களை, இந்தியாவுக்கு போகச் சொல்லி பயங்கரவாத சக்திகள் அச்சுறுத்தி வருகின்றன. இந்த சமயத்தில், அனைத்து இந்தியர்களும் அமைதியாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், போலீஸ் உதவியை நாட வேண்டும். ஹிந்து – சீக்கிய சமூகங்களிடையே பிரிவினையை துாண்டிவிட காலிஸ்தான் அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இதில், நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
– சந்திரா ஆர்யா,
இந்திய வம்சாவளி, கனடா எம்.பி.,
துாண்டி விட முயற்சி
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நம் நாட்டு துாதரகத்தை, கடந்த மார்ச்சில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கினர். இது தொடர்பாக விசாரித்து வரும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, 10 பேரின் புகைப்படங்களை நேற்று வெளியிட்டது. மேலும், இவர்கள் குறித்த தகவல்களை அளிக்கும்படி, பொது மக்களிடம் கேட்டுள்ளது.
புகைப்படங்கள் வெளியீடு
கனடா துாதரக அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் உள்ள கனடா துாதரக அதிகாரிகளுக்கு, சமூக வலைதளங்களில் அச்சுறுத்தல் வருவது கவலை அளிக்கிறது. எங்களது அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என, நம்புகிறோம். துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, துாதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கனடா வலியுறுத்தல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்