மக்களவையில் பாஜக எம்.பி பேச்சால் சர்ச்சை: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது .புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மீது விவாதமும் நடைபெற்றது.

அதேபோல், சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றது குறித்தும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக எம்.பி, சர்ச்சைக்குரிய அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

உடனடியாக எழுந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக எம்.பியின் பேச்சுக்கு தான் மன்னிப்பு கோருவதாக கூறினார். எம்.பியின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடும் எச்சரிக்கை விடுத்தார். எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தை மட்டும் இல்லை, ஒவ்வொரு இந்தியனையும் அவமதித்து விட்டதாக சாடினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.