தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்'
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அயலான்'. இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை 2024 பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்து தீபாவளி போட்டியிலிருந்து விலகிவிட்டார்கள்.
தீபாவளிக்கு ஏற்கெனவே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த கார்த்தியின் 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யாவின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களுக்கு ஒரு பெரும் போட்டி குறைந்துவிட்டது.
படத்திற்கான கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் வேலைகள் முழுவதுமாக முடிவடையாததே 'அயலான்' படம் தள்ளிப் போனதற்குக் காரணம் என்கிறார்கள். இப்படத்தில் 4500 விஎப்எக்ஸ் ஷாட்கள் இடம் பெற்றுள்ளதாம். அவற்றைத் தரமானதகச் செய்ய வேண்டும் என படக்குழு விரும்புகிறார்களாம். இப்படம் வெளிவந்த பிறகு தமிழில் வெளிவந்த முதல் தரமான விஎப்எக்ஸ் படம் என்ற பெயரை நிச்சயம் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறார்கள்.