வங்கி கணக்கு, சொத்து விபரம் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

சென்னை, உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து, வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விபரங்களை, நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.

'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம்' பேக்டரி நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது.

ரூ.15 கோடி டிபாசிட்

இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி,'உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட்டை, விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை, விஷால் நிறைவேற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2021 முதல் இப்போது வரைக்குமான, விஷாலின் வங்கி கணக்குகளின் விபரங்களையும், அவருக்கு சொந்தமான சொத்து விபரங்களையும் ஆவணங்களுடனும் தாக்கல் செய்ய, நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். அதன் பின்னும், வங்கி கணக்கு, சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்படாததால், விஷால் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

முழுமையாக இல்லை
நீதிபதி முன் ஆஜரான விஷாலிடம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது என, கேள்வி எழுப்பினார். 'நீதிமன்றத்தை விட பெரியவர் என நினைக்க வேண்டாம்' என்றும் கண்டிப்புடன் கூறினார். ஆவணங்களின் விபரங்களை அளிக்கவும், அவகாசம் வழங்கினார்.

இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஐ.டி.பி.ஐ., ஆக்சிஸ், பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் உள்ள கணக்கு விபரங்களும், அசையா சொத்துக்களின் விபரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, முழுமையான விபரங்களை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி பதில் மனு தாக்கல் செய்ய, லைகா தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. விசாரணையை, வரும் 29க்கு, நீதிபதி ஆஷா தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.