கண்கலங்கிய தமிழக வீரர்… ஒரு வழியாக இந்திய அணியில் வாய்ப்பு! உணர்ச்சி பெருக்கில் தினேஷ் கார்த்திக்

Sai Kishore Viral Video: ஆசிய விளையாட்டு தொடரில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. 2014ஆம் ஆண்டே கிரிக்கெட் போட்டிகள் ஆசிய விளையாட்டு தொடரில் சேர்க்கப்பட்டாலும், அதன்பின் இந்த தொடரில்தான் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் பங்கேற்றன. குறிப்பாக, இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது.

நேபாளை வீழ்த்திய இந்தியா

அந்த வகையில், இந்திய ஆடவர் அணி ஆசிய விளையாட்டு தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றது. இந்நிலையில், இந்திய ஆடவர் அணி நேபாளம் அணி உடன் காலிறுதியில் இன்று மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிக்க, 20 ஓவர்களில் 202 ரன்களை குவித்தது. 

பெரிய இலக்கை துரத்திய நேபாளம் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 3, ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

உணர்ச்சிவசப்பட்ட சாய் கிஷோர்

இப்படியிருக்க, போட்டிக்கு முன் இரு அணிகளும் அவர்களின் தேசிய கீதங்களை பாடினர். அதில் இந்திய அணி வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சாய் கிஷோர் (Sai Kishore) கண்ணீர் மல்க தேசிய கீதத்தை படித்தது பார்ப்போரையும் கலங்கச் செய்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு விளையாடும் அவருக்கு பாராட்டையும், தங்களின் வாழ்த்துகளையும தெரிவித்து வருகின்றனர்.

புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக்

இந்நிலையில், சாய் கிஷோர் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthick) அவரது X பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “சாய் கிஷோரின் கடின உழைப்புக்கு கடவுள் சிறந்த பலன்களை கொடுக்க தொடங்கிவிட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் வெள்ளை பந்து தொடர்களில் ஆதிக்கம் செய்த முக்கிய வீரர்களுள் ஒருவரான சாய் கிஷார் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸடார் தான். அவர் இந்த இடத்தை அடைந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்.  காலையில் எழுந்தவுடன் அவரின் பெயர் பிளேயிங் லெவனில் இருப்பதை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட தொடங்கினேன். உங்களுக்கு சில வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசை இருக்கும், அந்த பட்டியலில் எப்போதும் முன்னணியில் இருப்பவர் இவர்தான்.

தனது பேட்டிங் பாணியை வளர்த்துக்கொண்டதே அவரை குறித்து எடுத்துக்காட்டும். அவரின் அற்புதமான திறம் அவரை எந்த வடிவ கிரிக்கெட்டிலும் புறக்கணிக்க இயலாத ஒரு வீரராக உருமாற்றியுள்ளது எனலாம். அவர் குறித்து என்னால் பேசிக்கொண்டே இருக்க முடியும், ஆனால் இப்போதைக்கு அவர் இந்திய அணியில் அறிமுகமானதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். யாராலும் இனி அதை அவரிடம் இருந்து எடுக்க முடியாது” என பாராட்டித் தள்ளியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ்

சாய் கிஷோர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். நேபாள் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அதிரடி பேட்டர்களுக்கு மத்தியில் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.