ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகனுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று(புதன்கிழமை) ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், “இது சட்டபூர்வமான விஷயம். நாங்கள் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரானோம். நீதிமன்றம் எங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

வழக்கு கடந்துவந்த பாதை: பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் இடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தின. இந்நிலையில் சிபிஐ லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி, மகனுக்கு எதிராக ஜூலை 3-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ரயில்வேயின் விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், நடைமுறைகளுக்கு எதிராக மத்திய ரயில்வேயில் சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

மேலும், வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, தங்களின் உறவினர்கள் மூலமாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலங்களை விற்றுள்ளனர். அந்த நிலங்கள் சந்தை மதிப்பில் இருந்து நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தனது மனைவி ராப்ரி தேவி, மகள் மிஷா பாரதி, மற்றும் மத்திய ரயில்வே அதிகாரிகள் மற்றும் பலருடன் இணைந்து குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டியது.

ஜூலை 3ம் தேதி இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முதல் குற்றப்பத்திரிகையில் தேஜஸ்வி யாதவின் பெயர் சேர்க்கப்படவில்லை. லாலு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் மேலும் 14 பேர் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது, இந்த வழக்கு கடந்த 2022ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.

லாலு பிரசாத் மீது வழக்கு தொடரத் தேவையான அனுமதி உரிய அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டிருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் லாலு பிரசாத் மற்றும் மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி வைத்தது. அந்த சம்மனில், ஊழல், குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி போன்ற பல்வேறு குற்றங்களுக்கான முதன்மையான காரணிகளுக்கான சாட்சியங்கள் இருப்பதாக குறிப்பிடிருந்தது.

இந்நிலையில், ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.