கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக இன்று காலை திருச்செந்தூர் நோக்கி ரயில் சென்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தபோது, நீண்ட தலைமுடி மற்றும் பெரிய டிராவல் பேக்குகளுடன் 4 இளைஞர்கள் நவீன கைத்துப்பாக்கியுடன்,துப்பாக்கியை மாறி மாறி உபயோகிப்பது போலவும், புல்லட் சொருகுவதுபோலவும் சைகை செய்தனர். மேலும், துப்பாக்கியைப் பயணிகளை நோக்கி சுடுவதுபோல காட்டிஅச்சுறுத்தியிருக்கின்றனர்.

அச்சமடைந்த ரயில் பயணிகள் பெட்டியிலுள்ள ரயில்வே அவசர எண் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல்ரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலீஸார், கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட ரயில், ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், உடனடியாக பிரச்னைக்குரிய ரயில் பெட்டியில் ஏறி துப்பாக்கி வைத்திருந்த 4 இளைஞர்களையும் பிடித்து கீழே இறக்கினர். பிறகு அவர்களின் உடைமைகளை சோதனை செய்து, அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, நவீன ரக துப்பாக்கி மாடலைச் சேர்ந்த பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீஃப் (19), கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக் (24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா (18), காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான் (20) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று, பின்னர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவுக்குச் செல்லவிருந்தனர்.

மேலும் காவல்துறையினர் மற்றும் திண்டுக்கல் இருப்புப்பாதை காவல் துறையினர் இணைந்து, அவர்கள் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதும் நோக்கத்துக்காகச் சென்றவர்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் கைத்துப்பாக்கியைக் காட்டிப் பயணிகளை மிரட்டிய நான்கு பேரை, சுற்றிவளைத்துக் காவல்துறை கைதுசெய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.