என் வயிற்றில் அடிக்கலாமா? – கன்னட அமைப்பினருக்கு சித்தார்த் கேள்வி

சித்தார் தயாரித்து, நடித்த படம் 'சித்தா'. குழந்தைகள் பாலியல் பலாத்கார பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் புரமோசனுக்காக பல ஊர்களுக்கு சென்று வருகிறார் சித்தார்த். அப்படி அவர் பெங்களூரு சென்றபோதுதான் கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்டார். இதற்காக கன்னட நடிகர்கள் பிரகாஷ்ராஜூம், சிவராஜ்குமாரும் மன்னிப்பு கேட்டனர். இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவை நேற்று சென்னையில் நடத்தினார்.

விழா முடிவில் இதுகுறித்து சித்தார்த் நிருபர்களிடம் கூறுகையில், “சித்தா படத்தை நான்தான் தயாரித்தேன். எனது வாழ்வாதாரத்துக்காக இந்த படத்தை புரமோட் செய்ய, பெங்களூரில் ஒரு சிறு ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுத்து செய்தியாளர்களை சந்தித்தேன். நான் பத்திரிகையாளர்களை சந்தித்த அன்று அங்கு பந்த் இல்லை. மறுநாள்தான் பந்த் அதனால் மறுநாள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன்.

எனது நிகழ்ச்சியை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் பத்து பேர் திடீரென வந்து ரகளை செய்து, செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தியது, எனது வயிற்றில் அடித்தது போல் இருந்தது. காசு போட்டு பணம் எடுக்கத்தான் நாங்கள் சினிமா தயாரிக்கிறோம். இதுபோல் எங்கள் வயிற்றில் அடிக்கலாமா? மற்ற தயாரிப்பாளர்களுக்கு இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காகவே இதை சொல்கிறேன்.

கன்னட மக்களுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கன்னட திரையுலகினருடனும் பிரச்னை இல்லை. அப்போது ஏன் இந்த 10 பேர் மட்டும் என்னை தடுக்க வேண்டும்? இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமாருக்கும் பிரகாஷ்ராஜிற்கும் நன்றி” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.