டொரோன்டோ : கனடாவில் சிறிய ரக பயிற்சி விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இந்திய பயிற்சி விமானிகள் இருவர் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், ‘ஸ்கைக்வெஸ்ட் ஏவியேஷன்’ என்ற விமான பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதற்கு சொந்தமான இரட்டை இஞ்சின்கள் உடைய இலகுரக ‘பைபர் பி.ஏ. – 34’ என்ற விமானம், சில்லிவாக் நகரத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது.
உள்ளூர் விமான நிலையம் அருகே பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென விபத்தில் சிக்கிய விமானம், தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், விமானி மட்டுமின்றி அவருடன் இருந்த நம் நாட்டைச் சேர்ந்த இரு பயிற்சி விமானிகளும் பலியாகினர்.
இந்த தகவலை அந்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்த இந்தியர்கள் இருவரும், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதில், ஒருவரான அபய் பாட்ரூ, 25, கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அடுத்த மாதத்துடன் பயிற்சியை நிறைவு செய்ய இருந்தார்.
மற்றொருவரான யாஷ் ராமுகடே, 25, குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் சரிவர தெரியவராத நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement