உலக கோப்பை 2023: 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரெலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி அப்போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றியை பெற்றது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் அடுத்த போட்டியை விளையாடும் இந்திய அணி அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக பிசிசிஐ மற்றும் ஐசிசி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழா கூட இல்லாமல் தொடங்கிய நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. 1.32 லட்சம் ரசிகர்கள் நேரில் அமர்ந்து பார்க்கக்கூடிய இப்போட்டிக்கான தொடக்க விழாவில் பாலிவுட் பாடகரான அர்ஜித் சிங் பாடவுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், போட்டியை நேரில் காண வருமாறு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போட்டியை நேரில் கண்டுகளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை லீக் போட்டியை நேரில் கண்டுகளிக்க இருக்கிறார். அவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 60 பத்திரிக்கையாளர்களும் இந்தியா வர இருக்கின்றனராம்.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதில்லை என்பதால், இப்போட்டியை நேரில் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை வரலாற்றை தொடருமா? இல்லை பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான மோசமான வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தெரிந்துவிடும்.
இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. லீக் போட்டிகளில் உலக கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.