புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வளாக பெயர்ப்பலகையின் நிறத்தை நீல நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியமைத்ததற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன கோஷமும் எழுப்பினர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின் நலத்துறையின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் முன்பு அத்துறையின் பெயர்ப்பலகையானது நீலம் மற்றும் வெள்ளை நிற எழுத்துகளால் வைக்கப்பட்டிருந்தது. அதில் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பழைய பெயர்ப்பலகையை எடுத்துவிட்டு புதிய பெயர்ப்பலகை நேற்று மாற்றப்பட்டது.
புதிய பெயர்ப்பலகையானது காவி நிறத்தில் இருந்தது. அதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, பெயர்ப்பலகை கீழே அமர்ந்து கோஷமிட்டனர்.
ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், “துறையின் இயக்குநர் அமைச்சர் சாய் சரவணன்குமாரின் சகோதரர். அமைச்சர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், பெயர்ப்பலகையை காவி நிறத்தில் மாற்றி இருக்கின்றனர்” என்றனர். இதுகுறித்து அத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது என்றனர்.