பிணைக் கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் பிணைக் கைதிகளை சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் நேற்று 5-வது நாளை எட்டியது. முதல் நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 150 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறை பிடித்துச் சென்றனர். சிலரை அவர்களுடைய வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர். இதனிடையே, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு பிணைக் கைதியை கொல்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், பிணைக் கைதியாக உள்ள ஒரு குடும்பத்தினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துப்பாக்கிய ஏந்திய ஒருவர், “நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என உங்கள் நாட்டு மக்களிடம் தெரிவியுங்கள்” என காலில் ரத்தம் சொட்ட உட்கார்ந்திருக்கும் ஒருவரிடம் கூறுகிறார். அந்த பிணைக் கைதியுடன் அவரது மனைவி உட்கார்ந்திருக்கிறார். அவரது மடியில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் 2 குழந்தைகள் அவர்களுக்கு அருகே தரையில் உட்கார்ந்திருக்கின்றனர்.

அந்த பிணைக் கைதி, “காசா பகுதியை ஒட்டிய கிபுட்ஸ் நகரில் உள்ள எங்கள் வீட்டில் ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். என் காலில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரத்தம் வடிகிறது” என கூறுகிறார்.

இதையடுத்து, கைதியிடம் அடையாள அட்டை கேட்கின்றனர். தேடி எடுக்க வேண்டும் என அவர் கூறியதையடுத்து, ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த மற்றொருவர் அடையாள அட்டையைத் தேட உதவுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளின் மிரட்டலை இஸ்ரேல் ராணுவம் கண்டுகொள்ளவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.