ராஜமவுலியுடன் மீண்டும் இணைவேன் : ரவிதேஜாவின் ஆசை நிறைவேறுமா ?

தெலுங்கு திரையுலகில் ஒருபக்கம் சீனியர் ஹீரோக்களையும், இன்னொரு பக்கம் இளம் முன்னணி ஹீரோக்களையும் சமாளித்து இதற்கு நடுவில் தனிப்பாதை போட்டு வெற்றியை ருசித்து வருபவர் நடிகர் ரவிதேஜா. இவரின் நடிப்பில் அடுத்ததாக டைகர் நாகேஸ்வரராவ் என்கிற படம் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய திருடன் ஒருவனை பற்றிய கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் குறித்து தனது புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரவி தேஜா பேசியபோது அவரிடம் அடுத்ததாக ராஜமவுலி படத்தில் இணைந்து எப்போது நடிப்பீர்கள் என்று கேள்வி வைக்கப்பட்டது.

இதுபற்றி அவர் கூறும்போது, “ராஜமவுலி படத்தில் நடிக்க மாட்டேன் என யாராவது சொல்வார்களா ? நிச்சயம் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அது விக்ரமார்குடு படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக சில முறை கூறியுள்ளார். நேரம் காலம் எல்லாம் கூடி வந்தால் நிச்சயமாக என்னுடைய ஆசை நிறைவேறும்” என்று கூறியுள்ளார் ரவிதேஜா.

கடந்த 2006ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்கிரமார்குடு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ரவிதேஜா. இந்த இருவருக்குமே அவர்களது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக இது அமைந்தது. பின்னர் சில வருடங்கள் கழித்து தமிழில் சிறுத்தை என்கிற பெயரிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றது. அதன்பிறகு ராஜமவுலி மிகப்பெரிய படங்களை இயக்கி இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களின் ஒருவராக மாறிவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என கூறியுள்ளார் ரவிதேஜா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.