
முற்பிறவியில் நான் புத்த துறவியாக இருந்தேன் : அதிர வைக்கும் நடிகை லேனா
மலையாள திரை உலகில் கடந்த 15 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் லேனா. இவர் தமிழில் தனுஷின் அனேகன் மற்றும் திரவுபதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தனது பேட்டிகளில் பல விஷயங்களை தத்துவார்த்தமாக பேசுவார் லேனா. அவ்வளவு ஏன், தான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து அதற்கான நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது யாரை விவாகரத்து செய்ய நினைத்தாரோ அவருடனேயே அமர்ந்து குலோப் ஜாமூன் சாப்பிடும் அளவிற்கு வாழ்க்கையை ரொம்ப எளிதாக எடுத்துக் கொள்பவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முற்பிறவியில் திபெத் அருகே உள்ள பகுதியில் ஒரு புத்த துறவியாக இருந்ததாக கூறி அதிர வைத்துள்ளார். அதன் தூண்டுதல் காரணமாகவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள லேனா, அடுத்து சொன்னது தான் இன்னும் அதிர்ச்சியான விஷயம். நடிகர் மோகன்லாலுடன் தனக்கு ஒரு ஆன்மிகத் தொடர்பு இருந்து வருவதாகவும் அவரை தனது ஆன்மிக குருவாக கருதுவதாகவும் கூறியுள்ளார் லேனா.