பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். சன்னி லியோன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரின் 9 வயது மகள் பெயர் அனுஷ்கா. இந்தச் சிறுமி, மும்பை பெக்ரம்பாக் பகுதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவரை நேற்று மாலையிலிருந்து காணவில்லை. சிறுமியின் குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது வீட்டில் வேலை செய்யும் உதவியாளரின் 9 வயது மகள் அனுஷ்கா மோரேயை, நேற்று இரவிலிருந்து காணவில்லை. அவரை அவரின் பெற்றோர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தச் சிறுமியை பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் 50,000 ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறேன். அனுஷ்கா பற்றி தகவல் கொடுத்தாலும் 50,000 ரூபாய் கொடுக்கப்படும்” என்று குறிப்பிட்டு, அனுஷ்காவின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். மேலும், அனுஷ்கா பெற்றோரின் போன் நம்பரையும் சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அனுஷ்கா காணாமல்போனது குறித்து போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து, தேடி வருகின்றனர்.
மும்பையில் மட்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 383 பெண்கள் காணாமல்போயிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் 16-35 வயதுக்கு உட்பட்டவர்கள். மகாராஷ்டிரா முழுவதும் 3,594 பெண்கள் காணாமல்போயிருக்கின்றனர். காணாமல்போனவர்களில் குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றனர். மும்பை போலீஸாரும் காணாமல்போகும் பெண்களைக் கண்டுபிடிக்க தனிப்பிரிவை ஆரம்பித்து பணியாற்றி வருகின்றனர்.