பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் இஷ் சோதிக்கு பதிலாக பெர்குசன் இடம் பெற்றார். இலங்கை அணியின் ரஜிதா நீக்கப்பட்டு சமிகா கருணாரத்னே சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.
பேட்டர்கள் ஏமாற்றம்
நியூசிலாந்து பவுலர்கள் துவக்கத்திலேயே மிரட்டினர். சவுத்தீ ‘வேகத்தில்’ நிஷங்கா (2) சிக்கினார். பவுல்ட் பந்துவீச்சில் கேப்டன் குசல் மெண்டிஸ் (6), சமரவிக்ரமா (1) ஆட்டமிழந்தனர். குசால் பெரேரா மட்டும் ஓரளவு நிலைத்துநின்று அரைசதம் அடித்தார். 51 ரன்னில் அவர் அவுட்டானார். சான்ட்னர் ‘சுழலில்’ மாத்யூஸ் (16), தனஞ்ஜெயா (19) அவுட்டாகினர்.
இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. தீக்சனா (38) அவுட்டாகாமல் இருந்தார்.
172 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன் சேர்த்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் கான்வே 45 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 42 ரன்களும் மிட்சல் 43 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியால் இத்தொடரில் 5 வது வெற்றியுடன் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement