பெங்களூரு : தமிழக அரசு அறிவித்த 25 லட்சம் ரூபாயை, தான் படித்த நான்கு கல்லுாரிகளுக்கு ‘சந்திரயான் – 3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார்.
‘இஸ்ரோ’வில் சிறப்பாக பணிபுரிந்த ஒன்பது தமிழக விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசு சார்பில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு பணம் வழங்குவதற்கான விபரங்களை பெறும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ‘சந்திரயான் – 3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், தான் படித்த கல்லுாரிகளுக்கு அந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கும்படி அறிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக உயர்கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திக்கிற்கு, விண்வெளித் துறை கூடுதல் செயலர் சந்தியா வேணுகோபால் ஷர்மா எழுதிய கடிதம்:
தமிழக அரசு அறிவித்துள்ள 25 லட்சம் ரூபாயை, வீரமுத்துவேல் அறிவுறுத்தலின்படி, அவர் படித்த கல்லுாரிகளுக்கு பிரித்து வழங்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி; சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி; திருச்சி தேசிய தொழில்நுட்ப மையம்; மெட்ராஸ் ஐ.ஐ.டி., ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு பணத்தை வழங்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement