பிரித்விராஜ் படத்திற்காக குருவாயூர் கோவில் செட் அமைப்பதை தடுத்த நகராட்சி அதிகாரிகள்
கடந்த வருடம் மிகச்சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் மலையாளத்தில் வாரிக்குவித்த படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கதாநாயகனாக நடித்தவரும் மின்னல் முரளி பட இயக்குனருமான பஷில் ஜோசப் கதாநாயகனாக நடிக்க, மிக முக்கியமான வேடத்தில் நடிகர் பிரித்விராஜ் இதில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் பெரும்பாவூர் பகுதியில் ஒரு மிகப்பெரிய தனியார் இடத்தில் குருவாயூர் கோவில் போன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த இடத்தில் செட் அமைப்பதற்காக முறைப்படி நகராட்சியில் அனுமதி பெறவில்லை எனக் கூறி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதுடன் செட் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த இடத்துக்கு சொந்தக்காரரோ, நகராட்சியில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தன்மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்று செட் அமைக்கும் பணியை முடக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.