ஆஸ்திரேலியா கப் அடிக்க இதுதான் காரணம்… அஸ்வின் சொன்ன ஷாக் மொமண்ட்!

Indian National Cricket Team: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக் கோப்பை (ICC World Cup 2023) இறுதிப்போட்டி தோல்வியில் இருந்து மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் எனலாம். இந்திய வீரர்களின் அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி, டிராவிஸ் ஹெட்டின் அந்த அதிரடி, லபுஷேனின் அந்த நிதானம் என அனைத்தும் இந்திய ரசிகர்களை இன்னும் சில நாள்களுக்கு தூங்கவிடாது என்பதே நிதர்சனம். இன்று நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டியை (IND vs AUS T20) கூட பெரிதாக பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.

அஸ்வின் வெளியிட்ட வீடியோ

ரசிகர்களுக்கே இப்படி என்றால் இந்திய அணியின் (Team India) வீரர்களின் யோசித்து பார்த்தால் பரிதாபகரமாகவே இருக்கும். ஒரு போட்டிகளில் கூட தோற்காமல் வரிசையாக 10 போட்டிகளை வென்று, அரையிறுதியில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதிப்போட்டிக்கு சென்ற நிலையில், ஆஸ்திரேலியா அனைத்து நம்பிக்கையையும், கனவையைும் ஒட்டுமொத்தமாக நொறுக்கியது. 

இந்நிலையில், இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் (Ravichandran Ashwin) நிறைவடைந்த உலகக் கோப்பை குறித்து தனது யூ-ட்யூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அணியின் வெற்றி பயணம், இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவின் யுக்திகள், தனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை போன்ற பல விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். மேலும், இந்திய அணியின் தோல்வி குறித்தும் அவர் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிறப்பான யுக்திகள்

அதில் அவர் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் காட்டிய அசாத்திய ஆட்டம் குறித்து பேசியிருந்தார். “அவர்களின் இடதுகை ஸ்பின்னர் ஆஸ்டன் ஆகார் காயமடைந்த நிலையில் அவர்கள் ஒரு ஸ்பின்னரைதான் கொண்டு வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் டிராவிஸ் ஹெட்டை அணியில் சேர்த்தார்கள். அதன்மூலம், அவர்கள் டிராவிஸ் ஹெட்டுக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு தகவலை தெளிவாக்கினர். அது என்னவென்றால், வீரர்களின் பின்னால் அணி நிர்வாகம் கண்டிப்பாக நிற்கும் என்பதை உறுதி செய்தனர்.  

விராட் கோலி, டி காக் போன்றோர் 80 ரன்களுக்கு வந்த பின் நேரம் எடுத்து சதம் அடிப்பதை நாம் பாத்திருப்போம். அது அவர்களுக்கு ஒரு தனி நம்பிக்கையை தருகிறது. அதேபோல்தான் ஒரு பந்துவீச்சாளர் 3 விக்கெட்டுகளை எடுக்கும்போது, கேப்டன் அவருக்கு மேலும் ஓவர்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அதுவும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். அதைதான் ஆடம் ஸாம்பா விஷயத்தில் பாட் கம்மின்ஸ் செய்தார். ஆடம் ஸாம்பா ஆஸ்திரேலியாவுக்கு அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் வியூகம்

இந்த தொடர் முழுவதும் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் திணறி வந்தார். ஆனால், இறுதிப்போட்டியில் அவர் லெக் திசையில் பீல்டர்களை நிறுத்த வைத்து ஒரு ஆப்-ஸ்பின்னருக்கான பீல்ட் செட்டப்பிற்கு பந்துவீசினார். கம்மின்ஸ் டாப் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட் ஆப் இல்லாமல் இதுபோன்ற போட்டியில் பந்துவீசுவதற்கு மிகுந்த கட்டுக்கோப்பு வேண்டும். அதையே அவர் சிறப்பாக செய்தார், ஒரு பந்தை தவறாக போட்டிருந்தாலும் அது பவுண்டரிகளுக்கு போயிருக்கும்.  

அதுபோக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை எடுத்தது பெரிய விஷயம். யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியை விளையாடும்போது நான் வாயடைத்துப் போனேன். ஆஸ்திரேலியா என்னை தனிப்பட்ட முறையில் முழுவதுமாக ஏமாற்றி விட்டது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு பின் ஆடுகளத்தில் ஏதும் பிளவுகள் ஏற்படுமா என்பதை பார்க்க நான் ஆடுகளத்தை பார்க்க சென்றேன்.

ஷாக் ஆன ஜார்ஜ் பெய்லி

அப்போது ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் பேசினேன். ‘நீங்கள் எப்பொழுதும் செய்வது போல் நீங்கள் ஏன் முதலில் பேட் செய்யவில்லை என்று நான் அவரிடம் கேட்டேன் – அவர் அதற்கு, நாங்கள் இங்கு ஐபிஎல் மற்றும் இருதரப்பு தொடர்களை நிறைய விளையாடியுள்ளோம். சிவப்பு மண் சிதைவடையும். ஆனால் கறுப்பு மண் சிதைவடையாது. மாலை விளக்கு வெளிச்சத்தின் கீழ் அது பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். பனியில் கூட சிவப்பு மண்ணில் பெரிய தாக்கம் இருக்காது, ஆனால் கருப்பு மண் மதியம் நன்றாக இருக்கும், இரவில் அது கான்கிரீட்டாக இருக்கும். இது எங்கள் அனுபவம்’ என்றார். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்றார். அதாவது, ஐபிஎல் போன்ற தொடர்களை விளையாடுவதன் மூலம் அவர்கள் பெற்றுள்ள அனுபவத்தை கண்டு நான் வியக்கிறேன் என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.