India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி இப்போது மீண்டும் ஒரு சீர்திருத்த காலகட்டத்தில் இருக்கிறது எனலாம். ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பின் அனைத்து அணிகளிலும் பல வீரர்கள் ஓய்வு பெறுவதும், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதும் வாடிக்கைதான் என்றாலும் இந்த முறை இந்திய அணிக்கான சூழல் என்பது மற்ற காலங்களை விட வித்தியாசமானது எனலாம்.
இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல அனைத்து சாத்தியங்களும் இருந்தன. நேரத்தியான வீரர்கள் தேர்வு, சூழலுக்கு ஏற்ற வியூகம், அணிக்குள் நிலவிய அமைதி என அனைத்தும் பக்காவாக இருக்க உலகக் கோப்பையில் அடுத்தடுத்து 10 போட்டிகளில் வெற்றிகளை குவித்தது இந்திய அணி. ஆனால், மிக மிக துரதிருஷ்டமாக ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.
எனவேதான், இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா, ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வாரா, விராட் கோலி ஒருநாள் அணியில் நீடிப்பாரா, நிறைவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. இது அனைத்திற்கும் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் பதில் சொல்லும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரு முன்னோட்டமாக பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
கடந்த நவ.19ஆம் தேதியோடு, ராகுல் டிராவிட்டின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஒப்பந்தம் நிறைவடைந்தது. இந்நிலையில், அவரின் ஒப்பந்தத்தை நீட்டித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வெளியிட்டனர். ராகுல் டிராவிட் மட்டுமின்றி மற்ற பயிற்சியாளர்கள் குழுவும் இந்திய அணியுடன் தொடர்ந்து பணியாற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NEWS -BCCI announces extension of contracts for Head Coach and Support Staff, Team India (Senior Men)
More details here – https://t.co/rtLoyCIEmi #TeamIndia
— BCCI (@BCCI) November 29, 2023
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய மூத்த ஆடவர் அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒப்பந்தங்களை நீட்டிப்பதாக அறிவிக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பிறகு, அவருடன் பிசிசிஐ ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட்டது. பதவிக்காலத்தை மேலும் தொடர ஒருமனதாக ஒப்புக்கொண்டது.
இந்திய அணியை வடிவமைப்பதில் டிராவிட்டின் முக்கிய பங்கை பிசிசிஐ ஒப்புக்கொள்கிறது மற்றும் அவரது தனிச்சிறப்பான தொழில்முறையைப் பாராட்டுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மனின் முன்மாதிரியான பாத்திரங்களுக்காக பிசிசிஐ அவரை பாராட்டுகிறது. களத்தில் அவர்களது புகழ்பெற்ற பார்ட்னர்ஷிப்களைப் போலவே, டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி நகர்த்துவதில் நெருக்கமாக பணியாற்றினர்” என குறிப்பிட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு சாம்பயின் டிராபி தொடரை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பகிர்ந்துகொண்டன, அந்த இந்திய அணியில் ராகுல் டிராவிட் இடம்பெற்றிருந்தார். இதனை தவிர, ராகுல் டிராவிட் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் எவ்வித ஐசிசி கோப்பைகளையும் விளையாடவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரையும், இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரையும் முன்னேறின. 5 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பையை தொடரை இந்திய கைப்பற்றியது சற்று ஆறுதலான விஷயமாகும்.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது வெளியிடப்படவில்லை. அடுத்தடுத்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆகிய இரண்டு தொடர்களிலும் இந்தியாவை கோப்பை கனவை நிறைவேற்ற பிசிசிஐ ராகுல் டிராவிட் இடமே மீண்டும் பொறுப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், ரோஹித், விராட் இருப்பார்களா என்ற கேள்விதான் தற்போது அனைவரிடத்திலும் உள்ளது.