ஏழைகளுக்கும் போட் விடுங்கள் : அஜித்தின் உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் மழையும் அதைத் தொடர்ந்து பெரு வெள்ளமும் ஏற்பட்டு சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது. இதில் சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவருடைய வீட்டில் விருந்தினராக தங்கி இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற எந்த உதவியும் கிடைக்காமல் சோசியல் மீடியா மூலமாக தங்களை காப்பாற்றுமாறு செய்தி அனுப்பினார்.

இந்த தகவல் நடிகர் அஜித்தின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக அவர் போட் ஒன்றை அனுப்பி வைத்து அவர்களை மீட்டு வரச் செய்தார். இதற்காக விஷ்ணு விஷால் அஜித்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அஜித்துடன் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. பலரும் அஜித்தின் இந்த உதவியை பாராட்டி வருகின்றனர். அதேசமயம் நடிகர் போஸ் வெங்கட் அஜித்தின் இந்த செயல்பாடு குறித்து விமர்சிக்கும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து போஸ் வெங்கட் கூறும்போது, “தமிழ்நாடு எப்போதுமே அகதிகளுக்கு பாதுகாப்பு தருகிறது. தமிழ்நாடு வடக்கிலிருந்து வருபவர்களையும் இங்கே பாதுகாக்கிறது. (நீங்களும் (அஜித்) ஒரு நல்ல தொடர்பு வைத்திருக்கிறீர்கள்). ஆனால் நீங்கள் ஒருபோதும் உங்களை விரும்புகின்ற, பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கின்ற இங்கிருக்கும் ஏழை மக்களின் குரலை ஒரு போதும் கேட்கும் வாய்ப்பை பெற்றதில்லை. அவர்களுக்கும் கூட ஒரு போட் விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

ஒரு சராசரி மனிதனாக தனது உணர்வுகளை நடிகர் போஸ் வெங்கட் வெளிப்படுத்தினாலும் வழக்கம் போல அஜித் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகரை குறை சொல்கிறார் என்பதால் போஸ் வெங்கட் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதுவரை அஜித்தின் படத்தில் போஸ் வெங்கட் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.