காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – நிராகரித்த அமெரிக்கா…!

நியூயார்க்,

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 17 ஆயிரத்து 487பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனிடையே, காசா முனையில் பணய கைதிகளாக இருந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 137 பேர் காசாவில் பணய கைதிகள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை, காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், காசாவில் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. அதேவேளை, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை. ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.