அமராவதி: மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆந்திராவை மட்டும் இல்லாமல் அண்டை மாநிலமான தமிழகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது என்பதைக் கணக்கில் கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதற்கட்ட மதிப்பீட்டின் படி, 770 கிமீ தூரத்துக்கான சாலைகள் சேதமடைந்துள்ளன, குடிநீர், மின்சாரம், பாசனம் போன்ற பிற வசதிகளுடன் ரூ.10,000 கோடி மதிப்பிலான பயிர்களும் நாசமடைந்துள்ளன. எனவே, பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய குழுவினை அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் வேண்டுகோள் படி, மிக்ஜாம் பாதிப்புகள் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டால், உடனடி நிவாரணத் தேவைகளுக்கான முயற்சிகள் வேகமடைவதுடன் நீடித்த மற்றும் நீண்டகால உட்கட்டமைப்புகள் நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.