திருநெல்வேலி அருகேயுள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத் தம்பதியின் 8 வயது மகன், ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி பள்ளியிலுள்ள கழிவறைக் கோப்பைக்குள் கல் ஒன்று அடைத்தவாறு கிடந்துள்ளது. இதைப் பார்த்த தலைமை ஆசிரியை பொன்ராணி என்பவர், பட்டியலின மாணவனை அழைத்துள்ளார்.
பின்னர், அவனிடம் ”நீ தூய்மைப் பணியாளர் மகன்தானே… உனக்கு அடைப்பை எடுக்க தெரியும். கழிவறைக்குள் கையை விட்டு கல்லை எடுத்து அடைப்பை சரி செய்” எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் `முடியாது’ என மறுக்க, ”நான் இந்த ஸ்கூலோட ஹெச்.எம். நான் சொன்னால் செய்ய மாட்டியா?” என மிரட்டியுள்ளாராம்.
இதனையடுத்து அந்த மாணவன் கழிவறைக்குள் கையைவிட்டு கல்லை எடுத்துள்ளான். அன்றிரவு அந்த மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சிறுவனின் தாயார், ”மழையில நனைஞ்சியாப்பா. இப்படி காய்ச்சல் அடிக்கிறதே?” எனக் கேட்டுள்ளார். அதன் பிறகுதான் பள்ளியில் கழிவறை அடைப்பை தலைமை ஆசிரியை சரி செய்யச் சொன்னதைக் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மறுநாள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியை பொன்ராணியிடம், “கழிவறை அடைப்பை மாணவனை விட்டு எப்படி சரிசெய்யச் சொல்லலாம்” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு தலைமை ஆசிரியை சரியான பதில் கூறாததால், அந்தச் சம்பவம் குறித்து மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீஸார் தலைமை ஆசிரியை பொன்ராணிமீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். “இந்த விவகாரத்தில் அவரைக் கைதுசெய்ய வேண்டும், துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மாணவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.