அம்பிகா, ராதா ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளுக்குத் தடை ?

சென்னையில் ஒரு காலத்தில் பல இடங்களில் பல ஸ்டுடியோக்கள் இருந்தன. இப்போது ஓரிரு ஸ்டுடியோக்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஏவிஎம் ஸ்டுடியோவின் சில தளங்கள், பிரசாத் ஸ்டுடியோவின் சில தளங்கள், ஏஆர்எஸ் கார்டன் ஆகிய இடங்கள்தான் சென்னையின் சினிமாப் பகுதியான வடபழனி பகுதியைச் சுற்றி இருக்கின்றன. பூந்தமல்லி அருகே ஈவிபி ஸ்டுடியோ, ஈசிஆர் சாலையில் ஆதித்யராம் ஸ்டுடியோ, திருவேற்காடு அருகே கோகுலம் ஸ்டுடியோ என வேறு சில ஸ்டுடியோக்களிலும் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இவற்றில் தற்போது நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோருக்குச் சொந்தமான ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோவில் எந்தவிதமான படப்பிடிப்புகளையும் நடத்தத் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத் என்பவர் அம்பிகா, ராதாவின் தம்பி அர்ஜுன் என்பவருக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்திருந்தாராம். அதில் 19 லட்சத்தை அவர் திரும்பி வாங்கிவிட்ட நிலையில் இன்னும் 6 லட்ச ரூபாய் வாங்க வேண்டியுள்ளதாம்.

அதைக் கேட்டுப் பெற பேச்சுவார்த்தை நடந்த போது இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. அதனால், அந்த ஆறு லட்சத்தைத் தராமல் அர்ஜுன் இழுத்தடித்து வருகிறாராம். இது குறித்து அவர் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதனால், ஏஆர்எஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளை நடத்தத் தற்காலிகத் தடை விதித்துள்ளார்களாம். இதனால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

எந்த ஒரு சங்கமும் தனி நபர் மீது தடை விதிக்க சட்டப்படி உரிமையில்லை. அப்படியிருக்க மறைமுகமாக தடை எனச் சொல்லி அங்கு படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளதால் குறைவான வாடகை வசூலிக்கும் அந்த ஸ்டுடியோவில், பல சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகளும், டிவி தொடர்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.