5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ்
மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் 'சலார்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் இப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்காக ஐந்து மொழிகளிலும் தனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார் பிருத்விராஜ். “கடைசி கட்ட டப்பிங் திருத்தம் நிறைவடைந்தது. நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலைக் கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால், ஒரே படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறை.
தெலுங்கு கன்னடம், ஹிந்தி, தமிழ் மற்றும் நிச்சயமாக மலையாளம். ஒரு அற்புதமான படத்திற்காகச் செய்திருக்கிறேன். தேவா மற்றும் வரதா டிசம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் உங்களை தியேட்டர்களில் சந்திக்கப் போகிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பத்து நாட்களில் 'சலார்' படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் ஒவ்வொரு மொழியிலும் நடக்கும் எனத் தெரிகிறது.