சிதம்பரம் பகுதியில் பழைய கொள்ளிடம், வடக்குராஜன் கால்வாய், கான்சாகிப் வாய்க்கால், கொள்ளிடம் ஆறு, பாலமான் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் இருக்கின்றன. மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில், மேட்டூர் தண்ணீரில் வரும் முதலைகள், மேற்கண்ட நீர்நிலைகளில் தங்கி இனப்பெருக்கம் செய்து பெருகி விடுகின்றன. இந்த முதலைகள், அந்த நீர்நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் மக்கள், அந்த பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்லும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. நீர்நிலைகளில் இருக்கும் இவை, கோடைக் காலங்களில் ஊருக்குள் சென்று, ஆடு, மாடு, கோழி, கன்றுக்குட்டி போன்றவற்றை கடித்து இழுத்துச் சென்று விடும். இப்படியான முதலைகள் அடிக்கடி தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைகளில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் இந்த பகுதியில் வாடிக்கை. இப்படியான முதலைகளை மீட்கும் வனத்துறையினர், அதை வக்காரமரி குளத்தில் விட்டு விடுகின்றனர்.

அந்த முதலைகள், மீண்டும் மேற்கண்ட நீர்நிலைகளுக்கே திரும்பிவிடுகின்றன. அதனால் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள மக்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருக்கின்றனர். சிதம்பரம், நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர், இன்று அதிகாலை தன்னுடைய வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டு வாசலில் மரம் போல ஏதோ ஒன்று கிடந்ததைப் பார்த்த அவர், இங்கு எப்படி மரம் வந்தது என அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது அது மரம் இல்லை, முதலை என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. ஒய்யாரமாக படுத்து கிடந்த அந்த முதலையைப் பார்த்த அவர், அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார். உடனே அதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர், அப்பகுதி மக்களுடன் அந்த முதலையை பத்திரமாக அங்கிருந்து மீட்டனர். 8 அடி நீளமும், 110 கிலோ எடையுடன் இருந்த அந்த முதலையை பத்திரமாக எடுத்துச் சென்று, வக்காரமரி ஏரியில் விட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY