இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் வருகிற 24-ந்தேதி பிரியங்கா காந்தி பங்கேற்பு

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ளடக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைபயணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்.

இந்த யாத்திரையில், அவருடைய சகோதரி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த 16-ந்தேதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் பாதித்த நிலையில், அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை.

அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீரிழப்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் வருகிற 24-ந்தேதி அன்று உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில், பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.