சொத்துவரி அபராதம் குறைப்பு
சட்டசபையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த பெங்களூரு மாநகராட்சி திருத்த சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. சட்ட மேலவையில் நிறைவேற்றிய பின், கவர்னர் ஒப்புதல் அளித்ததும் இந்த சட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம், இவ்வளவு நாட்களாக சொத்து வரி செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளவர்களுக்கு, வரி மீதான அபராத தொகை 50 சதவீதமாக குறையும். 13 முதல், 15 லட்சம் பேர் பயனடைவர். மாநகராட்சிக்கு, 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
ரூ.5 லட்சம் நிதியுதவி
“பெங்களூரு கும்பலகோடு வாசனை திரவிய தொழிற்சாலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, தீ விபத்து ஏற்பட்டு, மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்,” என, சட்டசபையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அறிவித்தார்.
தவறாக கூறிய முதல்வர்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி, முதல்வர் சித்தராமையா சட்டசபையில் கோரினார். இதன் மீது வாய்மொழி ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக இருப்பவர்கள் ‘ஆம்’ என்றும், ஆதரவு தராதவர்கள் ‘இல்லை’ என்றும் கூறும்படி சபாநாயகர் காதர் கூறினார். அப்போது, பா.ஜ.,வினர் வெளிநடப்பு செய்திருந்தனர். ஆளுங்கட்சியினர் மட்டும் இருந்தனர். பெரும்பாலானோர் ‘ஆம்’ என்று கூறினர். சரியாக புரிந்து கொள்ளாத முதல்வர், ‘இல்லை’ என்று கூறிவிட்டார். அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement