மீண்டும் வெளியாகிறது 'கோ'

கே.வி.ஆனந்த் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று 'கோ'. சிம்பு நடிப்பதாக இருந்த படத்தில் அவர் கடைசி நேரத்தில் விலகி கொண்டதால் ஜீவா நடித்தார். அஜ்மல் வில்லனாக நடித்தார். 80களின் கனவு கன்னி ராதாவின் மகள் கார்த்திகா நாயகி. ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். 2011ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் மீண்டும் வருகிற மார்ச் 1ம் தேதி வெளியாகிறது.

அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் படம் கூறியிருந்தது. வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலை நாடே உற்று நோக்கியிருக்கும் சூழ்நிலையில் 'கோ' படம் மீண்டும் வெளியாவது முக்கியமானதாக இருக்கிறது.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில், “சரியான கதையை பொறுப்போடு பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றதால்தான் இந்தப் படம் வெற்றிப் பெற்றது. இப்போது, இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்காக இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை மீண்டும் வெளியிடவுள்ளோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.