`புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார்.
தற்போது அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக `வாரிசு’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர பாலிவுட், டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிப்படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. ஃபகத் பாசில்- அல்லு அர்ஜூன் மோதிக்கொள்ளும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஜப்பானில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ராஷ்மிகா மந்தனா, “புஷ்பா -2 மிகப்பெரியப் படமாக இருக்கும் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். படம் பாதி முடிந்துவிட்டது. ஒரு பெரிய ஹிட் பாடல் இதில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்னொரு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பை நான் இந்தியா திரும்பியதும் செய்ய வேண்டும். எந்தவொரு படிப்பின் தளமும் கொஞ்ச நாளில் நம் மனதுக்கு நெருக்கமாகிவிடும். அதை விட்டுப் பிரியும்போது மனதிற்குக் கஷ்டமாக இருக்கும்.
அப்படித்தான் ‘புஷ்பா’வின் படப்பிடிப்பின்போது எனக்கிருந்தது. என் வீட்டைப் போல அதன் படப்பிடிப்புத் தளத்தை நான் உணர்ந்தேன். ‘புஷ்பா 2’வில் மனைவியின் கதாப்பத்திரம்தான் எனக்கு. புஷ்பாவின் மனைவியாகிவிட்டதால், இன்னும் சில பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது. பாகம் 2ல் நிறைய மசாலா இருக்கும். அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று கூறினார்.