புதுடெல்லி: சமூக வலைதளப் பக்கங்களில் முகப்பு படத்தை (டிபி) மாற்றிவிட்டு ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஆதிஷி கூறியதாவது: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினரால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அர்விந்த் கேஜ்ரிவாலின் உத்வேக நிலை சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படத்தை மாற்றும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாட்டில் அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு படங்களை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இதற்கான பொதுவான படத்தையும் (காமன் டி.பி. படம்) அமைச்சர் ஆதிஷி வெளியிட்டார். சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அர்விந்த் கேஜ்ரிவால் நிற்பதைப் போன்று அந்த டி.பி. படம் உள்ளது. மேலும் அதில், `மோடியின் மிகப்பெரிய பயம் அர்விந்த் கேஜ்ரிவால்` என்று எழுதப்பட்டுள்ளது.