சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப் படை என்கவுன்ட்டர்… 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

நக்சலைட் இயக்கங்கள் செயல்படும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் குறைந்தது 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினகுண்டா மற்றும் கொரோனார் கிராமங்களுக்கு இடையே உள்ள ஹபடோலா வனப்பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சல் குழுவின் முக்கிய நபரான ஷங்கர் ராவ் உட்பட 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நக்சலைட்

மேலும், இதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பபுப் படை வீரர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.

இதுகுறித்து வெளியான போலீஸ் அறிக்கையில், `காங்கரில் உள்ள சோட்பெட்டிய காவல் நிலையத்தின் எல்லைக்குள் பினகுண்டா பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படையுடன் எல்லைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியது. என்கவுன்ட்டருக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதில் 29 நக்சலைட்டுகளின் சடலங்கள், AK 47 துப்பாக்கிகள், INSAS/SLR/Carbine/.303 ரைஃபிள்கள் மற்றும் ஏராளமான வெடிபொருள்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா

இந்த சம்பவம் தொடர்பாக மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, `எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு வழிகாட்டுகிறார். இனிவரும் காலங்களில் நக்சல் இல்லாத பஸ்தாரை (சத்தீஸ்கர் மாவட்டம்) உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு தீர்வு வெளிவர வேண்டும், பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும்’ என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.