புதுடெல்லி: டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது.
இதன்மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தில் அசையா சொத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கான் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் 18-ம் தேதி அமலாக்கத் துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதன்படி, அமனதுல்லா கான் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.