புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல்வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2-ம் நிலை சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னுடைய குடும்ப மருத்துவருடன் காணொலி மூலம் ஆலோசிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடைபெற்றபோது, “சர்க்கரை நோய் இருந்தபோதும் கேஜ்ரிவால் மாம்பழம் உள்ளிட்ட அதிக சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுகிறார். மருத்துவ காரணங்களை அடிப்படையாகக் கொண்டுஜாமீன் பெறவே அவர் இவ்வாறுசெய்கிறார்” என அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும் டெல்லி அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் நேற்றுகூறுகையில், “சிறையில் உள்ளமுதல்வர் கேஜ்ரிவாலுக்கு 2-ம்நிலை சர்க்கரை நோய் உள்ளது. இதனால் அவருக்கு இன்சுலின் மருந்து வேண்டும் என்றும் குடும்ப மருத்துவருடன் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறைநிர்வாகம் இதை ஏற்க மறுத்துவிட்டது.
கேஜ்ரிவால் மெதுவாக மரணமடைய வேண்டும் என்பதற்காக சதி நடக்கிறது. உரிய மருந்துகளை வழங்காவிட்டால் அவருடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.