சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம். இந்த மொழிபெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருக்கிறது. அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம். எனவே, இதுதொடர்பாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.