ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூலி என பெயரிட்டு அதன் அறிமுக வீடியோ நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், லியோ போன்ற படங்களில் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய இயக்குனர் ரத்னகுமார், லியோ பட விழாவில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் ரஜினி 171 வது படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது ரத்னகுமாருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் திரைக்கதை வசனம் எழுதிய சந்துரு அன்பழகன் என்பவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி படத்திற்காக திரைக்கதை வசனம் எழுதி வருகிறார். மாவீரன் படத்துக்கு இவர் எழுதிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதால், கூலி படத்தில் அவருக்கு வாய்ப்பு அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.