பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று (24) சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறையில் நீண்ட காலம் பணிபுரிந்த உயர்ஸ்தானிகர் தனது சேவைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பயிற்சிகளின் போது இலங்கையின் பல இராணுவ அதிகாரிகளை அறிந்துகொள்ள முடிந்தமை தொடர்பில் நினைவு படுத்தினர். அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் சமய ரீதியான சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் குறிப்பிடுகையில், அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்று இராணுவ ரீதியாகவும் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். விசேடமாக பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளை சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.
அதற்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை விருத்தி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.