மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஜூன் 2-வது வாரத்தில் பேரவை மீண்டும் கூடுகிறது

சென்னை: துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, ஜூன் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது.

சட்டப்பேரவையில் பட்ஜெட் அறிவிப்புக்குப்பின், துறைகள் வாரியாக மானிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதித்து, இறுதியாக அரசு கோரிய நிதி பேரவை ஒப்புதலுடன் ஒதுக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக, வரும் ஜூன் மாதம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படுகிறது.

முன்னதாக, கடந்த பிப்.12-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றினார். 2 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்ட அவர், தமிழக அரசு தயாரித்து அளித்த உரை மீதான சில கருத்துகளை தெரிவித்து அமர்ந்தார்.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டும் சட்டப்பேரவையில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், 3 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த பிப்.19-ம் தேதி தமிழக அரசின் பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், மறுநாள் பிப்.20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 4-ல் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக வரும் ஜூன் 2-ம் வாரத்தில் பேரவை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக துறைச் செயலர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி, மானிய கோரிக்கை புத்தகங்கள், புதிய அறிவிப்புகளை இறுதிசெய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.