டிடிபி வேட்பாளரின் சொத்து ரூ.5,700 கோடி: சுயேச்சை வேட்பாளரின் கையிருப்பு வெறும் ரூ.7

புதுடெல்லி: நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. அதன் விவரம்:

நாளை போட்டியிடும் வேட்பாளர்களில் 476 பேர் கோடீஸ்வரர்கள். இதில் ஆந்திராவின் குண்டூர் மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சந்திர சேகரின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி. பெரும் பணக்கார வேட்பாளர் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்த நிலையில் 2-ம் இடத்தில் இருக்கும் வேட்பாளர் தெலங்கானாவின் செவல்லா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி. இவரது சொத்து மதிப்பு ரூ.4,568 கோடி. ஆந்திராவின் நெல்லூர் தொகுதியில் டிடிபி சார்பில் போட்டியிடும் பிரபாகர் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.716 கோடி.

மேற்கவங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயின் சொத்து மதிப்பு ரூ.554 கோடி. ஆந்திராவின் அனாகாபலே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷின் சொத்து மதிப்பு ரூ.497 கோடி. தெலங்கானாவின் செவல்லா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கதம் ரஞ்சித் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.435 கோடி.

24 பேருக்கு சொத்து இல்லை: நாளை போட்டியிடும் வேட்பாளர்களில் 24 பேர் தங்களுக்கு சொத்து ஏதும் இல்லை என கூறியுள்ளனர். ஆந்திராவின் பபத்லா தனி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கட்டா ஆனந்த் பாபு, தனது கையிருப்பு வெறும் ரூ.7 என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் மாவல் தொகுதியில் போட்டியிடும் பிம் சேனா வேட்பாளர் சந்தோஷ் உபேல் தனது கையிருப்பு ரூ.83 என கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் விகாஸ் ரோகிதாஸ், தன்னிடம் ரூ.90 உள்ளதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மற்ற இரு வேட்பாளர்கள் தங்கள் கையிருப்பு ரூ.500 என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.