ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம். அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வழக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 4-ம் தேதி சிறப்பு புலனாய்வு படையினர் அவரை கைது செய்தனர். கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பெண்ணை கடத்தியதாக அவருக்கு எதிராக பதிவான ஆள் கடத்தல் வழக்கில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. 14-ம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (மே 14) அவருக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.5 லட்சத்துக்கான பத்திரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இதுபோன்றதொரு தருணத்தை எதிர் கொண்டது இல்லை என்றும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் ஹெச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.

முன்னதாக, பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதையடுத்து அவர் மீது பெண்கள் சிலர் காவல் துறையில் புகார் அளித்தனர். அதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது. எஸ்ஐடி-யின் விசாரணை வளையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் உள்ளனர். இதில் பிரஜ்வல் வெளிநாடு தப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.